வணிகம்

40% வர்த்தக வாகன சந்தைப் பங்கை இலக்காக குறிவைக்கும் TATA…

 டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2026 நிதியாண்டில், இருந்த 35.7 சதவீத உள்நாட்டு வர்த்தக வாகன (Commercial Vehicle) சந்தைப் பங்கை, 2028 நிதியாண்டுக்குள் 40 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர் தின நிகழ்வில், நிறுவனத்தின் வர்த்தக வாகனப் பிரிவுக்கான எதிர்காலத் திட்டங்களை நிறுவனம் வெளியிட்டது.

பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட முதலீட்டாளர் விளக்கக்காட்சியின்படி, 2028 நிதியாண்டு முழுவதும் நிறுவனத்தின் EBITDA லாப விகிதம் இரட்டை இலக்க அளவில் (Double-digit) தொடரும் என டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கிறது.

சந்தை வளர்ச்சி அதிகரிக்கும் காலகட்டங்களில் (Upcycle), இந்த லாப விகிதம் டீன்ஸ் (Teens) அளவுக்கு உயரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், 2028 நிதியாண்டில் தனது முதலீடுகளை வருவாயின் 2 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், வர்த்தக வாகனப் பிரிவின் சுதந்திர பணப்புழக்கம் (Free Cash Flow) வருவாயின் 7 முதல் 9 சதவீதம் வரை இருக்கும் எனவும், இவெகோ (Iveco) நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர் முதலீட்டு மூலதன வருமானம் (ROCE) 30 முதல் 35 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவெகோ நிறுவன கையகப்படுத்தல், 2027 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்குள் நிறைவடையும் நிலையில் இருப்பதாக டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.

“இவெகோ கையகப்படுத்தல், எங்களின் உலகளாவிய வளர்ச்சி பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. இதன் மூலம் உலகின் நான்காவது பெரிய வர்த்தக வாகன நிறுவனமாக உருவெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, வாகனப் படைகளின் மின்மயமாக்கல் (Fleet Electrification) கட்டாய விதிமுறைகள் மற்றும் சர்வதேச வணிகத்தின் நிலையான வளர்ச்சி ஆகியவை நிறுவனத்திற்கு சாதகமான காரணிகளாக இருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவுகளின் ஏற்ற இறக்கம், புவிசார் அரசியல் சிக்கல்கள் மற்றும் வட்டி விகித உயர்வு போன்றவை குறுகிய கால சவால்களாக இருந்தாலும், அவற்றை சமாளிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Related Posts