சென்னை: சென்னையின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் தேவைப்பட்டாலும், வேளாண் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத இடத்தில் அது அமைய வேண்டும் என்பதால், பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) நிர்வகித்து வருகிறது. தற்போதைய விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் என்ற நிலையில், சென்னையின் எதிர்கால தேவைகள், தொழில் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் சரக்கு போக்குவரத்தை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அவசியம் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஆடம்பரமல்ல… அத்தியாவசியம்! இரண்டாம் விமான நிலையம்.. – Industrial Economist Tamil
பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதிய விமான நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை கருத்தில் கொண்டு, 20 ஜனவரி 2025 அன்று ஏகனாபுரம் பகுதிக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசு தரப்பில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டிய இடம், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இதற்காக மாற்று இடங்களை ஆய்வு செய்து, சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை விமான நிலையத்தின் எதிர்கால விரிவாக்கத் தேவையை கருத்தில் கொண்டு Terminal-5 உள்ளிட்ட கூடுதல் வசதிகளை உருவாக்குவது குறித்தும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Terminal-3 மற்றும் Terminal-5 தொடர்பான விரிவாக்க நடவடிக்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.









