கூட்டம் சேர்ப்பது, கொண்டாடுவது, வைப் செய்வது இவை மகிழ்ச்சியை தருவது. இவற்றின் மறுபக்கமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பதும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது.
புஷ்பா-2
கடந்த ஆண்டு புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் கலந்து கொண்டார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவனும் அவரது தாயாரும் உயிரிழந்தனர்.

இதன் எதிர்வினையாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னரே இந்த விவகாரம் இந்திய அளவில் பேசப்பட்டது.
IPL-கொண்டாட்டம்
இதேபோன்று ஐபிஎல்-2025 இறுதிப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிப் பெற்றது. இது 18 ஆண்டுகளாக தோல்வியையே சந்தித்து வந்த ஆர்சிபி அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் மட்டுமின்றி கர்நாடகத்தின் அரசியல்வாதிகளுக்கும் கூட அதீத உற்சாகத்தை தந்தது. இதன் எதிர்வினையாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் வெற்றிவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர்.

பக்தி கூட்டங்கள்
ஒருபுறம் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் இப்படி என்றால் திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனத்தில் 12 பேர், உத்திர பிரதேசத்தில் கும்பமேளாவில் 30 பேர், கோவா லைலை ஜாத்ரா பூஜையில் 5 பேர், ஹத்ராஸ் போலே பாபா நிகழ்ச்சில் 100 பேர் என ஆன்மிக கூட்டங்களிலும் பலர் நெரிசலில் சிக்கி இறந்து போயுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு
ஆனால் இதுவரை அரசியல் கூட்ட நெரிசலில் பெரும்பாலும் எவரும் உயிரிழந்ததில்லை. அரசியல் கூட்டங்களுக்கு வரும்போதும் போகும்போதும் சாலை விபத்துகளில் பலர் உயிரிழப்பது ஒருபுறம் வாடிக்கையானதாக இருந்தாலும் கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழப்பதில்லை.

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரை பயணம் இந்த நிலையை மாற்றியமைத்திருக்கிறது. இந்த பரப்புரை பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததில்லை.
இலகுவான கூட்டம் சேர்ப்பு
இந்த சம்பவம் தமிழ் சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாகி உள்ளது. முன்பெல்லாம் ஒரு அரசியல் கூட்டத்திற்கு செல்வதற்கு பேருந்து உள்ளிட்ட வாகன வசதிகள் போதுமானதாக இருந்ததில்லை. அதே போல ஒரு கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதும் அவர்களை வரவழைப்பதும் கடினமானதாகவும் இருந்தது. ஆனால் இப்போது அது அவ்வளவு கடினமானதாக இல்லை. வாடகைக்கு வாகனங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. 10 பேர் சேர்ந்து ஒரு வேனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அரசியல் பொதுக்கூட்டத்திற்கு செல்வது தற்போது எளிதானது. வேன் இல்லை என்றால் கார், அதுவும் இல்லையென்றால் இரு சக்கர வாகனம் இருக்கிறது. சென்னையில் வண்டியை எடுத்தால் அடுத்த 5 மணி நேரத்தில் திருச்சிக்கே சென்று விடலாம். சாலைகளும் அந்த அளவிற்கு வசதியாக போடப்பட்டுவிட்டன.
முன்பு அரசியல் பொதுக்கூட்டத்திற்கு நேரில் சென்று துண்டறிக்கைகளை வழங்கவேண்டும். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் போனும், வாட்சப்பும், எக்ஸ் தளமும், இன்ஸ்டாகிராமும் இன்னபிற சமூக வலைதளங்களும் இருக்கின்றன. இப்போதெல்லாம் பலர் இப்படியான சமூக வலைதளங்களில்தான் கட்சியையே நடத்துகிறார்கள்.
நெரிசல் ஏற்படுவது ஏன்?
ரசிகர் கூட்டத்திலும் பக்தி கூட்டத்திலும் நெரிசல் ஏற்பட ஒரு முக்கிய காரணம் உண்டு. பக்தி கூட்டத்தில் கடவுள் அந்த குறிப்பிட்ட நேரம்தான் காட்சியளிப்பார். அந்த நேரத்திற்குள் அவரை பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலே நெரிசலுக்கு காரணமாக இருக்கின்றன.
ரசிகர் கூட்டத்திலும் இதுதான் மையப்புள்ளி. அந்த நாயகர் சிறிது நேரம்தான் நம் கண் முன்னே தெரிவார். அதற்குள் அவரை பார்த்துவிட வேண்டும் என்னும் எண்ணமே நெரிசலுக்கு அடிப்படை.
ஆனால் அரசியல் கூட்டம் அப்படி அல்ல. அரசியல் கட்சித்தலைவர்கள் பொதுக்கூட்டம் போட்டு விடிய விடிய பேசுவார்கள். அறிக்கைகளை படித்து அரசியலை அறிந்துகொள்ள முடியாத எளிய மக்கள் அதனை கேட்டு அரசியல் அறிவும் பெறுவர். அப்படியான பேச்சுகளை விடிய விடிய உட்கார்ந்து கேட்ட ஜனங்களும் உண்டு.
அனுபவமில்லாத விஜய்
ஆனால் விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவர்தான் என்றாலும் அவருக்கு அரசியலின் அடிநுனிக் கூட தெரியாது. இயல்பில் அவர் ஒரு நடிகர். நல்ல நடிகர். சினிமாவில் மனப்பாடம் செய்து வைத்து வசனம் பேசி நடிப்பதில் வல்லவர். இதைத் தவிர அவருக்கு வெறெந்த அனுபவமும் கிடையாது. எனவே அவரால் சில நிமிடங்கள் மட்டுமே பேசமுடியும். அந்த சில நிமிடங்கள் மட்டும்தான் அவரை ரசிகர்கள் நேரில் பார்க்க முடியும். பேச்சு முடிந்தால் அவர் கேரவன் போன்ற வாகனத்திற்கு உள்ளே சென்றுவிடுவார். இந்த எண்ணம்தான் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட கூடுதல் காரணமாக இருக்கிறது.

மாறிவரும் அரசியல் கூட்டங்கள்
மற்றொருபுறம் கூட்டம் சேர்ப்பதையும் பிரமாண்டத்தை காட்டுவதையுமே அரசியல் வெற்றியாக காட்டும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துள்ளது. டிரோன் கேமராக்களின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கட்சித்தலைவர் உறையாற்றும்போது கழுகு பார்வை காட்சியில் பிரமாண்ட கூட்டத்தை காட்டுவதுதான் இன்றைய அரசியல் பொதுக் கூட்டம் என்றாகிவிட்டது. இப்படி கூட்டத்தை காட்டுவதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.

கட்சித் தலைவரை மையத்தில் நிற்கவைத்து அவரை சுற்றி பெரும் கூட்டத்தை நிற்க வைத்து எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை கலக்குகின்றன. மறுபுறம் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு பதிலாக ரோட் ஷோ என்ற ஒரு கேடுகெட்ட கலாச்சாராம் பரவி வருகிறது. இவ்வளவு ஏன், மேடையில் தான் பேசும்போது தனக்கு பின்னால் கேமராவை வைத்து தனக்கு முன்னே கூடியிருக்கும் கூட்டத்தை காட்டுவதை இப்போதுவரை ஒரு தலைவர் விடாமல் கடைபிடிக்கறார். இப்படியான அரசியல் கட்சிகளுக்கெல்லாம் வியூகம் வகுக்க அரசியல் வியூக வகுப்பாளர்கள் என்ற ஒரு புதுத்தொழிலும் தற்போது வளர்ந்து வருகிறது. இது கோடிகளில் பணம் கொழிக்கும் தொழிலாக உருவாகியுள்ளது. சோகத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இவர்களுக்கும் அரசியலை பற்றியோ, தத்துவத்தை பற்றியோ, கட்சி அமைப்பு முறைகளை பற்றியோ எதுவும் தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கும் சில சில்லரையான தனித்தனித் தகவல்களும்தான். இணைய தளங்களின் வளர்ச்சியை வைத்தே இவர்கள் பிழைப்பை நடத்துகின்றனர்.
காலத்திற்கேற்ற மாற்றம் தேவை
இப்படித்தான் இன்றைய காலம் மாறி இருக்கிறது. கால மாற்றம் என்பது பெரும்பாலும் தொழிநுட்பத்தின் வளர்ச்சியையே குறிக்கிறது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் மனிதனின் வாழ்க்கைமுறையை அதற்கு ஏற்றார்போல மாற்றியமைக்கின்றன. அதற்கு தகுந்தார்போல் சமூகத்தின் விதிகளும் மாற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதை பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டும் போக்கு அதிகரித்தது. இதனால் விபத்துகளும் அதிகரித்தன. இதனை தடுக்க அரசு செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதை தடை செய்ய சட்டங்களை இயற்றியது.
சமீபகாலமாக நடந்துவரும் கூட்ட நெரிசல்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாகும். ஸ்மார்போன்கள், சமூக வலைதளங்கள், வாகன உற்பத்தி பெருக்கம், டிரோன் வீடியோ பிரமாண்டங்கள் என பல தொழில்நுட்பம் சார்ந்த காரணங்கள் இதில் உள்ளன. காரணங்கள் பலவாக இருந்தாலும் தீர்வு ஒன்றுதான். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப புதிய வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கப்பட வேண்டும். அது ரசிக கூட்டமானாலும் சரி, அரசியல் கூட்டமானலும் சரி, பக்தி கூட்டமானாலும் சரி அனைத்திற்கும் இது பொருந்துமாறு இவை உருவாக்கப்பட வேண்டும். இப்படி புதிய வழிமுறைகளை உருவாக்கி இது போன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதுதான் இறந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.








