கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அசோக் வாஸ்வானி, தனது தற்போதைய பதவிக்காலம் 2026 டிசம்பர் 31 அன்று முடிவடைந்ததும், மீண்டும் அப்பதவிக்கு வர விரும்பவில்லை என்று வங்கியின் இயக்குநர் குழுவிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு அசோக் வாஸ்வானி இந்த முடிவை எடுத்துள்ளதாக, கோடக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது முடிவை ஏற்றுக்கொண்ட இயக்குநர் குழு, புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியை நியமிப்பதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த செயல்முறை, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அசோக் வாஸ்வானியை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தது.
அசோக், இங்கிலாந்தின் பார்க்லேஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், பின்னர் அதன் உலகளாவிய நுகர்வோர், தனிநபர், பெருநிறுவன மற்றும் பணம் செலுத்தும் வணிகங்களின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், குழும நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். முன்னதாக, அசோக் சிட்டிகுரூப் ஆசியா பசிபிக்கின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், சிட்டிகுரூப்பின் உலகளாவிய செயல்பாட்டுக் மற்றும் மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.









