பிளஸ் 2 முடிந்தவுடன் ஒவ்வொருவரும் டாக்டர், இன்ஜினியர், சைண்டிஸ்ட் என பல கனவுகள் இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு எந்த பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்ற திகைத்து நிற்பர். இந்த நேரத்தில் ஒரு தெளிவான வழிகாட்டுதலையும், சரியான முடிவையும் எடுக்க பெரும் உதவி அளிக்கிறது தமிழக அரசு.

சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு, மாணவர்களுக்கு மிகப்பெரிய சவால் உள்ளது. நல்ல மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2-க்குப் பிறகு அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பதுபோன்ற கேள்விகளில் அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் தருகிறது கல்வித் தகவல் மையம்.
மாணவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை, அவர்கள் உயர்கல்விக்கான பயணத்துக்கும் துணையாக இருக்கிறது. இந்த துறைக்கு கீழ் செயல்படும் கல்வி தகவல் மையத்தை மாணவர்கள் தொடர்பு கொண்டு, உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெறலாம். 14417 என்ற இலவச எண்ணை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த மாதிரியான பாடத்தை தேர்வு செய்வது? குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தால் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறித்தும் மாணவர்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது, மாணவர்கள் தாங்கள் பயில விரும்பும் உயர் கல்வி நிறுவனங்களில் எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான cut-off மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்பது குறித்தும் தகவல் வழங்கப்படும். மாணவர்கள் பெற்றிருக்கும் cut-off மதிப்பெண்களுக்கு எந்த கல்லூரிகளில் வாய்ப்பு உள்ளது என்பதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். ![]()
கல்லூரிகளில் சேர்க்கை, மதிப்பெண் குறித்த அழுத்தம் போன்றவை பெற்றோர்களிடமிருந்தும் வரும் சூழ்நிலையில், மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் கல்வித் தகவல் மையம் வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்குகிறது.









