போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் ஜும்பா நடனத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே மன அழுத்தத்தைக் குறைக்கவும், போதைப்பொருள் மீது நாட்டம் வராமல் தடுக்கவும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜூம்பா நடனம் என்றால் என்ன?
ஜூம்பா என்பது லத்தீன் மற்றும் சர்வதேச இசையை, நடன அசைவுகளுடன் இணைக்கும் ஒரு உடற்பயிற்சி முறை. சல்சா, மெரெங்கு, கும்பியா, ரெக்கேடன், ஹிப்-ஹாப், சம்பா, பெல்லி நடனம் உள்ளிட்ட பலவற்றின் கலவையாக இந்த ஜூம்பா நடன அமைப்பு இருக்கிறது.

இது பாரம்பரிய உடற்பயிற்சியை போல் இல்லாமல், துள்ளலான இசை மற்றும் எளிதான நடன அசைவுகளுடன் இருப்பதால் இது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒன்றாக மாறியுள்ளது. பலர் தங்களுடைய உடல் இடையைக் குறைக்கவும், மன அழுத்தத்தை போக்கிக்கொள்ளவும் இந்த முறை உடற்பயிற்சியை நாடிச் செல்கின்றனர்.
எதிர்ப்புகளை மீறி அமல்
கேரள அரசின் இந்த திட்டதிற்கு சில ஹிந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜும்பா நடனம் ஆடும் போது மாணவர்கள் அதற்கேற்ற உடை அணிவார்கள் என்றும், அது கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கேரள அரசு, மாணவர்கள் பள்ளிச் சீருடையில்தான் இந்த ஜும்பா நடன பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், உடற்பயிற்சி மற்றும் யோகா போல உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மாணவர்களுக்கு ஜும்பா நடனம் உதவும் என்று கூறி, இந்த திட்டத்தை பள்ளிகளில் கேரள அரசு அமல்படுத்தியுள்ளது.









