ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானுக்கு அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை வழங்கி வருவதும் ஈரானின் முக்கியமான கூட்டாளியுமான ரஷ்யா இந்த போரில் பங்கேற்காமலே இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இதற்கான காரணத்தை ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின் விளக்கியுள்ளார்.
பனிப்போர்
இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலகட்டத்தை பனிப்போர் காலகட்டம் என்பர். இது பெரும்பாலும் போர் போர்களத்தில் நடைபெறவில்லை. அரசியல் சதிகள், படுகொலைகள், உளவு நடவடிக்கைகள் போன்ற பலவற்றை கொண்டதாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஓரணியில் நின்ற சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போர் முடிந்தவுடன் பரம எதிரிகளாக மாறின. போருக்கு முன்பும் அந்த இரு நாடுகளும் அப்படித்தான்.
ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி, முசோலினி தலைமையிலான இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய அச்சு நாடுகள் கூட்டணி இந்த இரு நாடுகளுக்குமே முதன்மை எதிரியாக இருந்தது. இதனால் இரண்டாம் உலகப்போரை ஒட்டி பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனக் குடியரசு போன்றவை ஓரணியில் தற்காலிகமாக இருந்தன.
எதிரும் புதிரும்
இரண்டாம் உலகப்போர் அதுவரை உலக வல்லரசாக இருந்த பிரிட்டன், பிரான்ஸை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவையும், சோவியத் ரஷ்யாவையும் முதன்மை வல்லரசாக மாற்றியமைத்தன. போர் முடியும் தருவாயில் இருந்தபோது அச்சு நாடுகளிடம் இருந்து அமெரிக்கா கைப்பற்றிய பகுதிகள் அவர்களுக்கு ஆதரவானவர்களிடமும் சோவியத் கைப்பற்றிய பகுதிகள் அவர்களுக்கு ஆதரவான சக்திகளிடமும் ஒப்படைக்கப்பட்டன. இதில் கொரியா வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டது. ஜெர்மனி கிழக்கு, மேற்கு என இரண்டாகியது.
இப்படி தொடங்கிய பனிப்போர் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இடையிலான போர்கள், விடுதலை போராட்டங்கள், தேசிய இனப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து பல்வேறு நாடுகளாக மாறியது. இதன் பிறகு அமெரிக்கா மட்டுமே உலகின் ஒரே வல்லரசாக திகழ்ந்து வந்தது. இருந்தாலும் சில ஆண்டுகளிலேயே சோவியத் யூனியனில் இருந்து வந்த ரஷ்யா மீண்டும் வலுவான போட்டியாளராக மாறியது. இதில் ரஷ்யாவோடு தற்போது சீனா, வடகொரியா போன்ற நாடுகளும் உள்ளன.
வல்லரசின் நலன்கள்
2022 ஆம் ஆண்டு உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர தீவிரம் காட்டியது. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால், அது ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று சொல்லப்பட்டது. இதனால் ரஷ்யா உக்ரைனின் மீது போர்த்தொடுத்தது. 2023 ஆகஸ்டில் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் துணை நின்றதாகவும் ஈரானுக்கு ரஷ்யா பக்கபலமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த இரு போர்களுமே வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டாலும் அதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நலங்களும் இருந்தன.
தள்ளி நிற்கும் ரஷ்யா
ஆனால் தற்போது ஈரான் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் தொடுக்க, அமெரிக்கா வீம்பாக வந்து ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.
ஆனாலும் ஈரானை ஆதரிக்கும் ரஷ்யா, அதற்கு ஆதரவாக களம் இறங்கவில்லை. இவ்வளவிற்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்திய அணு சக்தி மையங்களை வடிவமைத்துக் கொடுத்ததே ரஷ்யாதான்.
இதுதான் காரணம்
இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ரஷ்யாவும் ஈரானும் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவுகளை கொண்டிருக்கிறோம். ஆனால் ரஷ்ய மொழிபேசும் ஏராளமான மக்கள் இஸ்ரேலில் வசிப்பதால் மோதலில் நடுநிலை வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி இஸ்ரேல் கிட்டதிட்ட ரஷ்ய மொழி பேசும் நாடு எனவும் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சு வார்த்தைகளை தொடங்கினார். உக்ரைனிடம் இருந்து ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது சாத்தியமில்லை என கருத்து தெரிவித்தார். மேலும் விளாதிமிர் உக்ரை அதிபர் ஜெலன்ஸ்கியிடம் போரில் உதவியதற்காக அந்நாட்டின் வளங்களை தங்களுக்கு வழங்க கட்டாயப் படுத்தினார். இது ஒரு வகையில் போரை நிறுத்துவதற்கானதாக பார்க்கப் பட்டாலும், மறுபுறம் இவை அனைத்துமே ரஷ்யாவிற்கு சாதகமானவை.
உக்ரைன் மீதான ரஷ்ய போரில் உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்திக் கொண்டதன் மூலம் ரஷ்யாவிற்கு மறைமுகமாக அமெரிக்கா உதவி செய்துள்ளது. இதனால்தான் ஈரான் மீதான தாக்குதலின் போது ரஷ்யா போரில் இறங்கவில்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.









