தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்துள்ளது. என்ன தான் தங்கம் விலை உயர்ந்தாலும் அதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஆபரண தங்கத்தை விட தங்க பாண்டு, தங்க ETF-களில் முதலீடு செய்ய இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த நான்கு மாதங்களில் தங்க ETF-களில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தங்க பத்திரம் போல் NSE, BSE போன்ற பங்குச் சந்தைகளில் தங்கத்தை வாங்க–விற்கக் கூடிய முதலீட்டை Gold ETF (Exchange Traded Funds) என்பர். அதாவது தங்க விலை உயர்ந்தால், Gold ETF விலையும் உயரும்; தங்க விலை குறைந்தால் ETF விலையும் குறையும். செய்கூலி செலவு இல்லாததால் இது ஆபரண தங்கத்தை விட குறைந்த விலைக்கு கிடைக்கும். மேலும், அதிக பங்கு சந்தை சார்ந்த ரிசர்ச் தேவைப்படாததால் புதிய முதலீட்டாளர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
பங்குசந்தையை பொருளாதார சூழல்கள் எப்படி நிர்ணயிக்கிறதோ, அதேபோல் தங்கத்தின் விலையிலும் மாற்றம் எற்படும். உலக நாடுகளுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டால் பங்குசந்தை சரிவடையும். அப்போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குசந்தை, பாண்டுகளிலிருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வர். இதனால் தங்க விலை உயரத் தொடங்கும்.
தற்போதைய சூழலில், இஸ்ரேல்–ஈரான் போர், டிரம்ப் வரிவிதிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தை பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. ஆனால் தங்க விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை தங்கத்தின் விலை 45% உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்க ETF-களை நோக்கி திரும்பியுள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரு ஒரு ஆண்டும் சுமார் 23% உயர்ந்து வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் மொத்த தங்க விநியோகம் 1,206 டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 1% அதிகரித்துள்ளது – 2016க்குப் பிறகு முதல் காலாண்டில் அதிகபட்சம் என்ற நிலை. பங்குசந்தை நிலையற்று இருப்பதால் பாதுகாப்பான முதலீடாக தங்க ETF-களை மக்கள் விரும்பி வருகின்றனர்.









