பொது

பறவைக்காய்ச்சல் எதிரொலி…செத்து விழும் பறவைகள்.. எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு!

பறவைக்காய்ச்சல் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன், அடையாறு பகுதியில், குறிப்பாக இந்திரா நகர் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் காகங்கள் இறந்து கிடந்தன.

சில இடங்களில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த இறப்புகளின் காரணத்தை கண்டறிய அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ICAR ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆய்வில் அந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இது குறித்த செய்திகள் வெளியான நிலையில் மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.

பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.

இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

இது சம்பந்தமாக பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

ப்ளு போன்ற அறிகுறிகள், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும்.

ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனை /மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் பறவை இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts